Tuesday, March 2, 2021

அப்பா

எந்த நேரத்திலும் போலவே என் அப்பாவை மிஸ் பண்ணுகிறேன் இந்த நாளிலும்.

திருமணம் என்கிற பந்தத்தில் இணைந்த சந்தோஷத்தில் அப்பாவின் அண்மை இழப்பு தெரியவில்லை. பிறகு குழந்தை குட்டி என்கிற கமிட்மென்ட் அப்பா ப்ரயாரிட்டி லிஸ்டில் இல்லை. 

பொருளாதாரத்தை மேம்படுத்த என நான் ஓடிய ஓட்டத்தில் அப்பா திரும்பவும் பின்னுக்குத் தள்ளப்பட்டார். அப்பாவும் ஒடிக் கொண்டிருந்தார் தன்னுடைய கமிட்மென்டுகளுக்காக.

நான் ஒரு நிலையை எத்தியவுடன் அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலை ஓய குளிக்க காத்திருந்தவளானேன். கடைசிவருக்கும் அந்த அலை ஓயவேயில்லை.

நிறைய அவமானங்களையும் அவமரியாதைகளையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன் அவருக்கு. ஆயினும் ஒரு நாளிலும் அன்பைக்குழைத்து தேன் தடவிய 'மோளே' என்கிற விளியன்றி என்னைப் பெயர் சொல்லிக் கூட அழைத்ததேயில்லை என் அப்பா.

என்னுடய அத்துணை சறுக்கல்களிலும் அரணாய் காத்து நின்ற என் அப்பா. குடும்பமே எனது தான்தோன்றித் தனமான சிலபல முடிவுகளை விமரிசித்தபோதும் என்னை குத்திக் கிழிக்காமல் கூடவே நின்ற என் தகப்பன்

பெருமையுடன் எப்போதும் சொல்வேன் அவருடைய செல்ல மகள் நான் என்று. ஆயினும் அவரும் நானும் சேர்ந்தார்ப் போல ஒரு புகைப்படம் கூட இல்லை என்னிடம். 

2004- மார்ச் இரண்டு முதல் என் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வுடன் இருக்கும் படியான மகளாகிப் போனேனே அப்பா

இந்த பதினைந்தாம் நினைவு நாளில் இன்னமும் அதிகதிமாய் உங்கள் இழப்பை உணர்கிறேன். லவ் யூ அப்பா

PC: Selvan Selvan

Monday, March 1, 2021

கொரோனா

 நெருங்கிய உறவு ஒன்று விஷம் அருந்தி வாழ்வை முடித்துக் கொண்டது மற்றும் ஒரு சின்னத் திரை நடிகை தற்கொலையை எல்லாம் கேட்டு இதை சொல்கிறேன்.

இந்த வருடம் எதிர்பாராத பேரிடர்கள் நிறைய. கொரோனா, வருமானம் இழப்பு, புயல், வெள்ளம், வசிப்பிடம் இழப்பு இன்னும் ஏகப்பட்ட இழப்புகள் இவையெல்லாமே பேரிழப்புகள் தான். 

இவற்றோடு முக்கியமான இழப்பு நம் உடனிருந்த சிலர் நோய் காரணமாகவோ தற்கொலைகள் காரணமாகவோ நம்மை விட்டு பிரிகையில ஏற்படும் அதிர்வலைகள் இன்னமும் நம்மை அழுத்தவும் செய்கிறது.

நான் ஒரு ஒர்த்லெஸ், கையாலாகாதவள்/ன் என்ற எண்ணம் மிகப் பலரை எண்ணத் தோற்றுவிக்கிறது சூழ்நிலைகள். கூச்சமின்றி சொல்கிறேன், இந்த கொரோனா தாக்குதலுக்கு பிறகு என்னை மிகவும் ஆக்கிரமித்தது இந்த எண்ணம்.

ஆனால் இந்த உலகில் நீ இரண்டு கொம்புடன் பிறக்கவில்லை. ஜஸ்ட் மனிதப் பதர்தான் நீ என்று ஒட்டுமொத்த மனித குலத்தையும் பார்த்து கெக்கலித்து சிரிக்கிறது கோவிட்19.

இன்று மனுக்குலம் உயிருடன் இருந்தால் போதும் என்று மிரட்டிப் பணிய வைத்து இருக்கிறது ஒரு துக்கிளியூண்டு உயிரி.

ஒன்று சொல்கிறேன். அறிவுரை அல்ல. எனக்கே நான் சொல்லிக் கொண்டதை உங்களுக்கும் சொல்கிறேன். இன்றைய தேதியில் நம் உடல் நலத்தை பேணி நாம் உயிருடன் இருப்பது மிக முக்கியம். வைரஸ் மட்டுமின்றி இயற்கை கூட நம்மை உரசிப் பார்க்கும் காலத்தில் தற்கொலைகள் எவ்விதத்திலும் தீர்வாகாது.

எழுபது வயது கிழமெல்லாம் விரல் சொடுக்கி 'மாத்தணும், எல்லாத்தையும் மாத்தணும்' என்று நம்முன் நிற்க காண்கையில் நாம் நமது சொந்த வாழ்க்கையை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டு வாழ  எந்த விதத்தில் இவ்வுலகில் வாழத் தகுதியில்லாது போவோம்.

வலியது வாழும். இதுதான் உயிரியல் தத்துவம். அதனால் நாம் மனதாலும் உடலாலும் வலுவேற்றி உயிருடன் இருப்போம் முதலில்.

வீரவசனம் பேச இன்னும் நிறைய காலம் கிடைக்கும்.

முதல் புடவை

 இன்றைக்கு என்னவோ அப்பாவின் நினைவு அதிகமாய் இருக்கின்றது. 

அது ஒரு டீனேஜ் காலம். எதன் காரணமாகவோ அந்த வருடம் கிறிஸ்துமஸ் புத்தாடை கடைசி வரை எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. தமபி தங்கை ஆடைகள் ரெடி. எனக்கு மட்டும் இல்லாமல் போனதன் காரணம் ஏனென்று தெரியவில்லை.

இருபத்தி நான்கு தேதி வரை ட்ரெஸ் வரவில்லை. அப்பா திருப்பூரில் கடை வைத்திருந்தார். அம்மாவும் அன்றைக்கு அங்கே போயிருநதார். இரவு ஒன்பது மணி வரையிலும் இருவரும் வரவில்லை.

மனம் சோர்ந்து போய் நெஞ்சம் வெடிக்கும் துக்கத்தில் அமர்ந்து இருந்தேன். ஏனெனில் ரெடிமேட் ஆடைகள் என்றாலும் கடைகள் அடைத்து விடுவார்களே.

தாயும் தகப்பனும் வந்தார்கள் பத்து மணிக்கு கையில் திருபுவனம் பட்டுப் புடவை பையுடன். புடவையின் நிறமும் டிஸலனும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் அதற்கான ஜாக்கெட் புடவையுடன் இருக்கிறது தைக்காமல்.

இரவு பதினொன்றரைக்கு சர்சசுக்கு போக வேண்டும். அழுகை கண்ணில் முடடிக் கொண்டு நிற்கிறது. அப்பாவோ என்னைக் கவனியாமல் கூலாக குளித்து விட்டு வந்து வழக்கப்படி தரையில் அமர்ந்தார். 

என்னை அந்த புடவை டப்பாவை எடுத்த தரச் சொன்னார். எனக்கோ அந்த புடவை பிடிககவுமில்லை. இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என்ற மனநிலையில் இருந்தேன். அப்பாவின் செல்ல மகளாயிற்றே நான்.

முதலில் டைம்பீஸ் எடுத்து பக்கத்தில் வைக்கச் சொன்னார். அடுத்து புடவையும் சிசரும் கேட்டார். ஜாக்கெட் வெட்டுவதற்குள் தையல் மெஷினில் நூல் போடச் சொன்னார். அவர் கேட்டது ஆக முப்பது நிமிடம். 

பத்தரை மணி முதல் வெறும் இருபது நிமிடத்தில் ஜாக்கெட் ரெடி. அடுத்த பதினைந்து நிமிடம் அம்மாவுக்கு ஊக் கட்ட. சிறப்பாக புத்தாடையுடன் அன்றைக்கு இரவு சர்ச்சுக்கு போனோம்

அப்படியாக எனது முதல் புடவையின் கதை, கிறிஸ்துமஸ் புத்தாடை கதை,அப்பாவின் தொழில்நுட்ப திறன் கதை என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

பின் குறிப்பு: அந்த புடவை உடுத்திய நாளே காய்ச்சலில் விழுந்தேன். அடுத்த பத்து நாட்கள் தலை துக்க முடியாத படிக்கு இருந்து கடைசியில் திருஷ்டி சுத்திப் போட்டுதான் நல்லா ஆச்சு. என் அம்மா இப்போது இதை நினைவூட்டினார் 🤪🤪.

அவ்ளோ அழகு நான். காக்கைக்கு தன் குஞ்சு பழமொழி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல

Merry Christmas

பொங்கலோ பொங்கல்

 என்னுடைய சிறு வயது காலங்களில் கோவையில்தான் இருந்தோம். அப்போது பொங்கல் என்பது மிகவும் கொண்டாடப் படும் விஷயம். வீடுகளை வெள்ளை அடித்து சாணமிட்டு மெழுகி மாக்கோலம் போட்டு வைப்பார்கள். சிமெண்ட் தரைகளில் பெயிண்ட்டால் கலர் கலர் கோலம் போட்டும் வைப்பார்கள்.

முக்கியமாக அனைத்து வீடுகளும் இதே கெட்டப்பில் இருக்கும். மற்றும் எல்லா வீடுகளிலும் வேப்பிலை கொத்து சொருகி வைப்பார்கள், அதில் ஆவரம்பூ, பூளைப்பூ எல்லாம் சேர்ந்திருக்கும். வீடுகளில் வெளியே காணக் கூடியவைகள்  இவை. வீட்டுக்குள் பொங்கல் படையலிட்டு சாமி கும்பிடுவார்கள் என்பதை தவிர தெரியாது.

சேலத்தில் ஒரு ஐந்து வருடங்கள் இருந்தோம். அங்கு பொங்கல் என்பது பெரும் பண்டிகை. எல்லோரும் பொங்கல் பணம் பெறுவர் அவரவர் தொழிலகங்களில்.

புதுச்சட்டை அணிவர். வண்டி வேடிக்கை என்பது மிகவும் பிரசித்தி. வண்ண வண்ண வேடமிட்டு நேர்ச்சை செலுத்துவர் கோவில்களில்.

இதோ சென்னையில் பத்து பந்தினைந்து வருடங்கள். பொங்கல் கொண்டாட்டம் என்றால் இவர்களுக்கு டயர் எரித்து மத்தளக்கொட்டு கொட்டி ....... என்ன்னத்தை சொல்ல.

சரி சரி எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

முதல் காதல்

பத்தொன்பது வயது வரை கொண்டிருந்த வைராக்கியம் அம்மா அப்பா பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வது என்பது. அது பெற்றவர்களுக்கு செய்யும் மரியாதை என்று நம்பின எனக்கும் காதல் வந்தது.

மலையாளியை மணக்கக் கூடாது என்ற சபதத்துக்கு ஏற்ப தமிழ் இளைஞர் மனதை ஆட்கொண்டார். இரண்டு வருடங்கள் சந்திப்புகள் சினிமாக்கள் என்று ஓடிய தெய்வீக காதலை வீட்டில் சொன்னேன். 

(அப்பவே நாங்க அப்பிடி. நான்தான் வீட்டில் முதலில் போட்டு உடைத்தேன்) அம்மா பத்து நாட்கள் மண்டகப் படி பூஜை நடத்தியும் நான் கொண்ட கொள்கையில் மாறாது போகவே அப்பாவிடம் தகவல் பரிமாற்றம் செய்யப்பட அடுத்த வடிவம் பெற்றது என் தெய்வீக காதல்

பெற்றவர்களின் கூட்டு ஆலோசனையின் முடிவில் காதலனிடம் திருமணம் குறித்து பேச சென்றனர்.

அரிய தகவல் பெறப்பட்ட தினம் இன்று. அவருக்கு மலையாள பெண்ணை மணமுடிக்க எண்ணமே இல்லை என்பது தான் அது. 

காதலர் தினமாவது பொடலங்கா தினமாவது. குடும்பமாக அவமானம் பட்ட தினம். 

மன்னிச்சுடுங்க லில்லி & ஜேம்ஸ்

கார்

 கார்......

கஜினி மொட்டைமாடி கல்பனா சொன்ன மாதிரி எங்கப்பாவும் ஒரு அம்பாஸடர் மற்றும் மூன்று ஆட்டோவுக்கு முதலாளியாக இருந்தார். நான் நான்காவது படிக்கும்போது ஒரு சிட்பண்ட் காரன் ஏமாத்தின பொழுது அனைத்தையும் விற்று ஒரு லாரி நிறைய வீட்டு சாமான்கள் மற்றும் அம்பது பவுன் நகையுடனும் திருச்சியில் செட்டில் ஆனோம்.

அன்று முதல் 2004ல் அப்பா மரணிக்கும் வரை கார் வெறும் கனவாகவே இருந்தது அவருக்கு.

ஆனால் எனது கார் கனவு மாருதி வந்த பிறகுதான். அதன் ஒவ்வோர் மாடலும் என்னால் கூர்ந்து நோக்கப் படும். ஆனால் அதில் கால் வைக்க கூட நேரம் வரவில்லை. 2000ம் ஆண்டு வாங்க வேண்டும் என்று வைத்த கோல் 2002, 2004, 2005 2006 என்று போனது. 

கடைசியில் 2007 அக்டோபரில் ஸென் எஸ்டிலோ சிவப்பு நிறத்தில் வாங்கியபோது பெருமையில் பூரித்துப் போறேன். கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருட கனவு நனவான தினம் அல்லவா அது.

போட்டோ இருந்தது. தேடிக் கொண்டு இருக்கிறேன். அது ஒரு குட்டி கார். அதில் பவர் ஸ்டீயரிங் அது இது என்று ஹை என்ட் மாடல். பெருமிதம் பொங்க ராமச்சந்திரன் ரிச்சர்ட் மற்றும் லெனர்ட் நான் என அனைவரும் டிரைவிங் ஸ்கூல் போய் பழகி லைசென்ஸ் வாங்கினோம்.

அப்படி பல சிறப்பு வாய்ந்த கார் அதன் பிறகு 2014ல் புத்தம்புது ஃபியட் புன்டோ எடுத்த போது மாருதி ரொம்பவும் பின் தங்கி இருப்பது உணர்ந்தோம். ஆயினும் மாருதி மீது கொண்ட அன்பில் துளிகூட குறையில்லை.

2015ல் கொள்ளை நோய் பன்றிக் காய்ச்சலால் சாகப் பிழைக்க கிடந்த போது துளி தயக்கமின்றி அனைத்து நகைகளையும் அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவின மருமகள் (நானெல்லாம் கொடுத்து வைத்த மாமியாராக்கும்)

நகையை திருப்பித் தராதது குறித்து மனது சிரமப் பட்ட என் கணவர் எங்கள் கனவு காரை olx தளத்தில் போட்டு இரண்டே நாளில் விற்க துணிந்தார். 

ஒரு பழனி காரர் ரெண்டு டப்பா பஞ்சாமிர்தம் உடன் கேஷ் கொடுத்து வாங்கிப் போனார். நானோ கணவரோ ரோட்டுக்கு போய் பார்க்கவே இல்லை. . அதன் வடுக்களை இப்போதும் சிவப்பு எஸ்டிலோ எங்கேனும் பார்த்தால் தடவிக் கொள்வோம்.

 #உண்மையில்_அது_பெரும்_துயரம்

கல்வி

 படிப்பு.

அம்மா கல்வியை நம்பினார். அது மட்டுமே எங்கள் போல வர்க்கத்துக்கு முன்னேற்றத்தை தரும் என்பதை மிகவும் நம்பினார். எங்களை படிக்க வற்புறுத்தினார்.

எங்கள் சுழி அதை சரியாக புரிந்து கொள்ள விடவில்லை. அம்மாவை இந்த விஷயத்தில் நாங்கள் மூவருமே வெறுத்தோம்.

ஆயினும் எங்களை எங்கள் விருப்பங்களை மீறி படிக்க வைத்து ஜெயிக்க வைத்தார். உண்மையில் அவர் சொன்னது கேட்டு வளர்ந்து இருந்தால் ஒரு ஐஏஎஸ் ஐபிஎஸ் அளவுக்கு வளர்ந்து விட்டிருப்பார் என்று இப்போது தோன்றுகிறது.

ஆனாலும் நாங்கள் மூவருமே இன்று இந்த நிலைமையில் இருக்க காரணம் அம்மா கடினமான முறையை கையாண்டு கொடுத்த கல்விதான் கரணம்.

இன்று கல்வி மதிப்பெண் வாங்கும் ஒரு கருவி என்று கருதப் படுகிறது. எல்லாருக்கும் எல்லாத்திலும் முதல் இடத்துக்கு வர வேண்டும் என்பதே குறி. அதனால் பயன் என்ன என்றால் ஒரு மண்ணும் இல்லை.

பிறகேன் இத்தனை அழுத்தம் அது குறித்து. ஏன் பேத்தி மூணரை வயசாகிறது. லண்டனில் இருக்கிறாள். என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும். எவ்வளவு மார்க் வேணுமானாலும் வாங்கட்டும். 

கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என்று புகுந்து புறப்பட்டு வர வேண்டும் என்பது என் ஆசை. என் கனவுகளை மகன்கள் சாதித்துக் கொடுத்துள்ளனர். 

அடுத்த இலக்கு அடுத்த தலைமுறை நோக்கி என் அம்மாவின் வழியில்...❤️